தாந்திரீக எழுத்துப்புண்டரிகம்

Sunday, June 2, 2013

செயற்பாட்டுவினையிலே சொல்லத்தொடங்கும்போது, எளிய, நேரான முரட்டு எழுத்தாளன் பிறர்க்கு வனைந்த சோளக்கொல்லைப்பாதையிலே தானே வழி சிக்கித் தொலைந்து இலக்கியவாதியாகின்றான்; முன்னைய நாளிலே முட்டுக்கொடுக்கும் விமர்சகன் வைத்த செய்வினை நுனி கௌவி அடிபற்றித் திரி கொழுந்தெழுந்தெரிந்து பலிக்கத்தொடங்குகின்றது. தன் எழுத்தின் மென்கழுத்தைக் கையிணையால் மூச்சுத் திணறி முட்டத் திருகிவிட்டுத் தற்கொலை செய்துகொண்டு வீட்டுத்திரத்திலே பாதி விழியும் நாக்கோடு வெளித்தொங்கத் தூங்குகின்றான். "அசுவத்தாமன் மாண்டாலும்" தர்மன்கால் இப்போதும் காண், பாவவில்லை கறைமண்தரை.

எழுத்து குளிர்சாதனப்பெட்டியிலே பின்னொரு நாளுக்கென்று அள்ளிப் போட, செத்து, உப்புப்புளிகாரமிட்டுப் பொரித்துப் பின் சூடலர்ந்த விரிகோழித்தொடையாக, சுவை சூம்பி, மலைத்துறைந்து கிடக்கின்றது.

விமர்சகநபும்சகன் வேறு பதிக்கிற அழுகிய வெங்காயபுரவலவியாபாரி வாயிற்படி தேடிக் கைமுட்டோடு நகர்கிறான்.

இலக்கியம் வெண் காயவியாபாரிகளின் கலம்!
இது வெங்காயவியாபாரிகளின் காலம்!
ஆதலால், அற்பமனுஷ்யர்களே! இரட்சிக்கும் வெண்வியாபாரிகட்கும் விமர்சகநபும்சகர்கட்கும் பெரும்ஸ்தோஸ்திரமாயிருங்கள்!
தேவதேவர்களினதும் அவர்தம் ஆண்டவர்களதும் கிருபை நுமக்குண்டாகும்!

ஆதியிலே சொல்லிருந்தது!
ஆங்கிருந்து அட்சரம் பிளந்து பிறழப்பிறந்தது
அவர்களிற் பிழையில்லாதார் கைதன் முதற்கல்.

எழுத்தின் செய்வினை இலக்கியத்தின் செயற்பாட்டுவினையாம்.

0 comments: