Showing posts with label மொழி-2. Show all posts
Showing posts with label மொழி-2. Show all posts

தளைப்பட்டால் தலைவன் தாழ்வே

Thursday, May 20, 2010

"Robespierre was guillotined without trial in the Place de la Révolution. His brother Augustin, Couthon, Saint-Just, Hanriot and twelve other followers, among them the cobbler Simon, were also executed. Only Robespierre was guillotined face-up. When clearing Robespierre's neck the executioner tore off the bandage that was holding his shattered jaw in place, producing an agonising scream until the fall of the blade silenced him."
- Wikipedia on Maximilien Robespierre.

வேலைசெய்யுமிடத்திலே தலைமைத்துவம் பற்றிப் பேச்சு வந்தது; அப்பொருளிலே ஆய்வாளர் ஒருவர் தலைவர்களின் வகைப்பாட்டினைப் பட்டியலிட்டார்; "மக்களை வழிநடத்தும் தலைவன்; மக்களால் வழிநடத்தப்படும் தலைவன்; மக்களைத் தன் வழிநடக்க ஆணையிடும் தலைவன்; இலட்சியங்களைக் குறிபார்த்து நடக்கும் தலைவன்; நடப்புக்கேற்பத் தான் வழிநடத்துகின்றவர்களின் இருப்பினைத் தக்கவைக்கும் தலைவன்...." தொடர்ந்து என்ன சொன்னார் என்பதிலே கவனம் சிதறிவிட்டது; ஆராய்ச்சிக்கு இதுவெல்லாம் தேவையாகவிருக்கக்கூடும், ஆனால், நடைமுறைக்கு மிக எளிதான ஒரு கூறிடலே தலைமைத்துவத்தை வரையறுக்கப்போதுமென்று தோன்றியது:

தலைவன் (தலைவி) & தலைவர்.

தலைவர் என்ற சொல்லை, சாதாரணமாக, சுரணையிலாமலே முன்பக்கப்பத்திரிகைச்செய்திகளிலும் முக்கியவானொலிச்செய்திகளிலும் எழுவாயாக உள்வாங்கினேன் - எறும்பூர்வது போன்ற உணர்வுகூட இல்லாமல்; கூட்டுறவுச்சங்கத்தலைவர், சுதந்திரப்போராட்டத்தலைவர், கூட்டணித்தலைவர். ஒரு சம்பிரதாயத்துக்காக, உத்தியோகபூர்வ மரியாதையை வேண்டி அந்நியமாக எட்டிநிற்கின்ற சொல், தலைவர். "நிர்வாணமாக ஊர்வலம் போகின்றபோதும், பட்டாடையோடு பவனி வருகின்றார்" என்று பரணி பாடக் கேட்கின்றவர், 'தலைவர்'.

ஆனால், தலைவன் என்பது வேறான தொனியிலும் தோரணையிலும் வருவது. எம்ஜிஆரின் படத்தலைப்பாகவோ, கல்கியின் சிவகாமியின் சபதத்திலோ பார்த்திபன் கனவிலோ சிவகாமி ஆடும் நாவுக்கரசர் பாடலாகவோ அறிமுகமாகி, சங்கப்பாடல்களின் விளக்கவுரைகளிலே என்னுள்ளே விரிந்தவன், தலைவன். சம்பிரதாயத்தை விலக்கியும் கூம்புப்படிநிலை மறுத்தும் அணுக்கத்தன்மையோடு தொட்டு ஒட்டி நெருங்கிச் செல்லும் பதம், 'தலைவன்'; குழுமத்துக்குப் பாட்டுடைத்தலைவனாகவிருந்தாலுங்கூடப் பின் தொடர்கின்றவரை கண்ணப்பநாயனார், எறிபத்தநாயனார் போன்ற முரட்டுத்தொண்டர்களாக அன்பின் நெருக்கத்திலே இயங்கச்செய்பவன்; தம்மோடு பொருந்தாதென்கிறபோது, "தலைவா, உன் தலைக்கு இந்த சிலுப்பா டோப்பா பொருந்தவில்லையே! அடுத்த படத்திலே மாற்று" என்று கலரி_கதிரையிலிருந்து சீழ்க்கையை மறுத்துக்கூவச்செய்வபன் தலைவன்.

"மக்களாலே வழிநடத்தப்படும் தலைவன்தான் மக்களை வழிநடத்தும் தலைவனாக இருக்கிறான்" என்கிறேன்; ஆய்வாளநண்பர், "இல்லை, இரண்டும் வேறுவேறு; மோசஸ் மக்களை வழிநடத்திய தலைவன்; உரோபேஸ்பியர் மக்களால் வழிநடத்தப்பட்ட தலைவன்" என்கிறார். "அடப்பாவிகளே மக்களால் வழிநடத்தப்பட்டவன் என்ற புரட்சிக்காரனை அவன் பயன்படுத்திய கில்லட்டினுக்கே அனுப்பிவிட்டு, மக்களை மந்தைகளாக வைத்துப் பார்த்துத் தன் செய்கைகளுக்குக் காரணம் சொல்லவேண்டுமென்ற அடிப்படைத்தார்மீகமுமில்லாற் கூட்டிச்சென்றவனைக் கும்பிடும் சமூகமடா நீங்களெல்லாம்!" என்று வழக்கம்போலக் குதர்க்கமாக நாக்கிலே சரசுசதி எம்பினாள்; அமுக்கிவிட்டேன். "ஆமி அடம்பனுக்குள்ளை உடைச்சுக்கொண்டு வெளிக்கிட்டான்" என்று தொடங்கும் வார இறுதிகளின் ஒன்றுகூடலின் பேச்சுகளை, "தலைவர் அதுக்கு ஒரு பிளான் வைச்சிருப்பார்" என்ற ஒருவரி நெம்புகோலோடு தலைவர் முதுகிலே சுமையை நகர்த்திவிடும் மக்கள்தான் கேள்வியையே கேட்கவில்லையே, கேட்கவிரும்பவில்லையே, பிறகு மோசஸைப் பார்த்து இம்மக்களை மந்தையாக நடத்தினாயேயென்று குறைசொல்லி என்ன பயன்! ஒரு மக்கள்புரட்சியையே முன்னின்று நடாத்தி அரசன் பதினாலாம் உலூயியினையும் ஒஸ்ரியாவிலிருந்து வந்தேறு அரசி மரியேட் அந்தோனியேட்டினையும் ஊதாரி அரசினையும் கவிழ்த்த உரோபேஸ்பியரை எல்லோரிலும் சந்தேகம் கொள்ளவைத்துக் கடைசியிலே அதே கில்லட்டினுக்கு அனுப்பியதிலே அவன் கவிழ்த்த அரசுக்கு எத்துணை சம்பந்தமிருக்கிறதென்று வரலாறு தெளிவாகப் பேசவில்லை; ஆனால், தலைவன் உரோபேஸ்பியரை, தலைவர் உரோபேஸ்பியர் எல்லாவற்றையும் செய்வாரென்று விட்டுவிட்டு, தத்தமது வேலையைப் பார்க்கப்போன மக்களுக்குப் பெரிய பங்கிருக்கின்றது எனச் சொல்லலாம்.

உரோபேஸ்பியர் ஒரு சிறந்த தலைவன்; ஆனாலும், அவனும் தனிமனிதன்; அவனின் வல்லமைக்கும் எல்லையுண்டு; புறக்காரணிகளும் கைவசப்படாத்தருணங்களும் அவனை மீறியவை; ஆட்சிக்கட்டிலே தலைவராக மாற்றி ஏற்றிவிட்டு எல்லாவற்றையும் அவரே செய்வாரென்று தன் நாளாந்த காய் உரொட்டிக்காயும் குவளைக்குடிநீருக்காகவும் நகர்ந்த ஒரு பெருங்கும்பலுண்டு. இதைத் தவறென்று சொல்லமுடியவில்லை; எந்நேரமும் கத்திக்கூர்மையாக இருக்காத புரட்சியிலே மக்கள் தனிமனிதத்தீவாகவே சொந்தத்தேடுதலிலே சுழலமுடியும்; இயல்பு இதுதான். ஆயினும், இதன் விலையாக, இறுதியில் வரப்போகும் உலகத்தின் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையையும் ஏதோவிதத்திலே மேம்பட உதவிய முன்னோடிப்புரட்சியைச் செய்தவன் வரலாற்றிலே அவனின் சுருக்கமான இறுதிக்காலகட்டத்துக்காக வன்மையாகவே வரையப்பட்டுப் போகிறான். இரு பெரும் நகரங்களிலே அணுக்குண்டுகளைப் போட்டுக் கொல்ல அனுமதி கொடுத்த ஆட்சித்தலைவரும் "ஆலமரம் வீழ்ந்தால் நாணற்புற்கள் நசியுண்டு சாகத்தான் செய்யும்" என்று தோளை ஒரு முறை குலுக்கிவிட்டுப்போன ஆட்சித்தலைவரையும் மக்கள்புரட்சியின்பேரிலே பனிக்காட்டுவதைமுகாம்களுக்கு அனுப்பிக்கொன்ற ஆட்சித்தலைவரையும்விடவா, வரலாறு உரோபேஸ்பியரை மோசமாக எழுதவேண்டும்! வரலாறு என்பது எழுதுகின்றவரின் பார்வையைப் பொறுத்ததாலே விட்டுவிடலாம்.

ஆனாலும், இதுவொன்றும் உரோபோஸ்பியர் எக்குற்றத்தினையும் தவறினையும் இழைக்கவில்லையென்பதாகச் சொல்வதாகாது. அத்தலைவனிடம் "மக்கள் நலம் மக்கள் நலம் என்று சொல்லுவார்; தம்மக்கள் நலம் ஒன்றேதான் மனதிற் கொள்ளுவார்" என்றிருக்காததுட்பட எத்தனையோ தலைவர்களிலே இருக்காத புல்லமை தவிர்த்த பெருங்குணங்களிருந்தன. ஆனால், மக்கள்தலைவனிலிருந்து தேசியத்தலைவராகத் தள்ளிவிட்டு விளையாட்டுப் பார்க்கும் விபரீதத்தைப் புரிந்துகொள்ளாமல், அந்த 'தலைவன் | தலைவர்' இலட்சுமணக்கோட்டைக் கடந்த பேதமையும் கிடந்தது. அக்கத்திக்கோட்டினை உணர்ந்து கொள்ளும் தன்மையிருந்திருப்பின், தலைவர் என்று ஏற்றிவிட்டதின் பெயரிலே நிகழ்ந்த மக்களுக்கெதிரான ஒவ்வொரு கொடூரத்தினையும் தானே தான் செய்ததாகச் சுமந்துபோகவேண்டிய அவலம் ஏற்பட்டிருக்காது.

ஆனால், நெடுங்காலநோக்கிலே ஒருவன் தலைவனாயிருந்தானா அல்லது தலைவராகத்தானிருந்தானா என்று நிறுவுவது, அவனின் இருப்பல்ல, இறப்புத்தான் என்றுதான் சொல்லத்தோன்றுகின்றது. "அடுத்து என்ன செய்யப்போகின்றோம்" என்று தெரியாத குழப்பத்திலும் கேள்வியிலும் காலச்சுவரிலே ஆணியடித்துத் தொங்க மக்கள் நிற்கும்போது, ஓயாது பல்முளைத்து நன்னும் ஒவ்வொரு சுண்டெலியும் தலைமை நானென்று செய்கைப்பட்டியலாலே ஆசனத்தைக் கோரும் நிலையிலேதான், 'இதை நான் செய்தேன்' என்று சொல்லிக்காட்டாமலே மக்களை வழிநடத்தின, மக்களால் வழிநடத்தப்பட்ட அவன் தலைவனென நிறுவப்படுவது முழுமையடைகின்றது. தனக்கெனத் தன் ஆட்சியின் பின்னாலே வர ஒருவனைப் பழக்கப்படுத்தி வைக்காதுபோகின்றவனை எப்படி தலைவன் எனலாம் என்ற கேள்வி எழுப்புகின்றவர்கள் உள்ளனர்; கட்சியை வழிப்படுத்த வாரிசினைத் தலையணையும் மெத்தையும் கவசமும் கட்டி வளையத்துக்குள்ளேவிட்டுப் பழக்கப்படுத்துதல்கூட ஜனநாயகமற்றது; இந்நிலையிலே, மக்களை வழிநடத்த வாரிசையோ வாரிசுகளையோ வரிசைப்படுத்துப் போவது, வேண்டுமானால், அரசியலிலே ஒரு தலைவருக்கு அத்தியாவசியமானதாகலாம் - கௌரவப்பட்டங்கள், பெருவிழாக்கள்போல; ஆனால், ஒரு முறையான தலைவன் எந்நிலையிலும் மக்களையே தமக்குப் பொருந்தின அடுத்த தலைவனைத் தேர்ந்தெடுத்து வழிகாட்ட வழிநடத்தமுடியுமென்று விட்டுச்செல்வான்; இப்படியாக, 'இல்லா வெறுமை' உணரப்பட்டு, மக்களே தமக்கான அடுத்த தலைவனுக்கு வழிகாட்டி வழிநடத்தப்படும் நிலையிலேயே தலைவன் உருவாகுகிறான். அவன், களியைப் பிசைந்து வனைந்து மெருகிட உருவாகுகிறவன். தலைவனின் எல்லை இலட்சுமணக்கோட்டைத் தாண்டிக் கெடுகின்றவர் தலைவர். சரிகின்றபோது, தலைவன், மக்கள் உள்ளேயிருந்து ஒன்றைத் தன்னோடு பிய்த்துக்கொண்டே சரிகின்றான்; தலைவர், ஆட்சிப்பீடத்தைப் பிரித்துக்கொள்ளவும் பிய்த்துக்கொள்ளவும் பிள்ளைகளையோ பேய்களையோ விட்டுப்போகிறார்.

இத்தனையும் சொன்னபின்னால், உரோபேஸ்பியர் கில்லட்டிலினிலே போனபோது, 'தலைவனாகப் போனானா? தலைவராகப் போனாரா?' என்று கேட்டால், சொல்லக்கூடியது ஒரே பதில், 'அது கேட்பவருக்கு உரோபேஸ்பியர் என்ற தனிமனிதனைப் பற்றி இருக்கும் தனிப்பட்ட கருத்தினைப் பொறுத்தாகின்றது'.

இப்படியான சிதறின கருத்தோட்டங்களையெல்லாம் முறைப்படி கற்று ஆயும் நண்பருக்குச் சொல்லமுடியவில்லை; தமிழிலிருந்து இற்றைநாள் ஆங்கிலத்துக்கான மொழிபெயர்ப்பிலே உதிர்ந்துபோவது, தலைவனுக்கும் தலைவருக்குமான வேறுபாடு. மேலும், கொட்டிக்கிடக்கும் செய்திகளிலிருந்து இரைச்சல் களைந்து அடிப்படையிலே எளிதான விடயங்களைப் பிரித்தெடுத்துச் சொல்வதுதான் கடினமானகாரியம்.


For some he was the 'The Incorruptible', and
for the others, there was a 'dictateur sanguinaire'.....
but none can deny there reigned an indisputable unique leader
who would force the future historians quote our '
Anno Domini'.


அடிப்படைப்படம் நன்றி:
http://en.wikipedia.org/wiki/File:Robespierre.jpg

மீள்தன்மைமட்டு

Tuesday, May 18, 2010

கதை ஒன்று; அநேகருக்குத் தெரிந்த பழைய கதைதான்; ஆனால், சந்தர்ப்பத்துக்குத் தேவைப்படுவதாலே ஆங்காங்கே சின்னச் சீர்திருத்தம், பாத்திரமாற்றம் செய்து திரும்பச் சொல்வதினாலேதும் குறையப்போவதில்லை.

கதை இது; விவசாயி ஒருத்தன்; மனைவி + ஆறு குழந்தைகள் + அவன் பெற்றோர் + மனைவியின் பெற்றோர்; இத்தனை பேரும் வசிப்பது ஒரு குடிசை. வெளியிலே தொழுவத்தில் நான்கு பசுக்கள், இரண்டு காளைகள், கன்றுகள் சில; அருகே கூட்டுக்குள் கோழிகள், சேவல்கள் & குஞ்சுகள். மேலதிகமாக நாய் இரண்டு & நினைத்தால் வந்துபோகும் பூனைக்குடும்பம் (குடும்பக்கணக்கிலே போட்டுக்கொள்ளலாம்). வண்டில் ஒன்று. பன்னிரண்டு பேர் அமுங்கிக்கொள்வது கஷ்டமென்றும் ஆண்டைப்பண்ணையாரிடம் ('பார்முலா வில்லன்' பாத்திரம் வேண்டாமா?) குடிசையைக் கொஞ்சம் பெரிதுபடுத்தித்தரவேண்டுமென்று கேட்கப்போவதாகவும் விவசாயி சொல்கிறான். "கேட்டால் அவர் இதைவிடப் பெரிதாகக் கேட்ட காரணத்துக்காகக் இன்னமும் கஷ்டமேதான் கொடுப்பார்; நாங்களும் அந்தக்காலத்திலே கேட்டோம்" என்கிறது வீட்டுமூலையிலே முடங்கிக்கிடக்கும் முந்திய தலைமுறை. ஒரு மழைநாளின்பின்னால், கசகசப்பினைப் பொறுக்காமல் (கக்கத்திலே துண்டை வைத்துக்கொண்டு) கேட்டுவிடுகிறான். ஆண்டை சுருட்டை வாய்க்குள்ளே 'பப் பப்' என்று புகைபோக்கிச் சுழற்றிக்கொண்டு, " வீடெல்லாம் தரவேண்டிய அளவுக்கும் மேலாகத்தான் கட்டித் தந்திருக்கின்றேன். வேண்டுமானால், உள்ளது சிறக்க வேறேதும் வழி ஊர்த்துறவியிடம் போய் ஆலோசனைகேள்" என்று வாய்க்காலைத் திருப்பிவிடுகிறார். ஊருக்கெல்லாம் அறிவுரை சொல்லி ஓசியிலே தின்னும் துறவி (நல்ல பக்கவாத்திய வில்லன்) சொல்கிறார், "போய் பசுமாடுகள் நான்கையும் வீட்டுக்குள்ளே இழுத்துக் கட்டிக் கூட நாலு நாள் நித்திரை கொண்டுவந்துவிட்டுச் சொல்." விவசாயிக்குக் குழப்பம்; 'நும் ஏரணத்திலே எங்கோ தவறு' என்பதுபோல ஏறெடுத்துப்பார்க்கிறான்; துறவி சிரிக்கிறார் (மந்தஹாஸிக்கிறார் என்பதாக இங்கே போட்டுக்கொள்ளலாம்); கொல்லாமை கொடுமை மறுத்து நினைத்தமாத்திரத்திலே அசோகச்சக்கம் உள்ளங்கையிலும் உள்ளத்துச்சொல்லிலும் காட்டக்கூடியவரென்று விளம்பரம் கொண்ட துறவி நல்லமனிதர், ஆண்டைக்கும் அடிமைக்கும் முள்ளுச் சரியாத நடுநிலையாளன்.

இதுவொன்றும் பெரிய பயங்கரவாதச்சட்டமில்லையென்று விவசாயி வந்து பசுக்களை இழுத்து உள்ளே கட்டுகிறான்; முதியதலைமுறை பாதி திகைப்பு மீதி நகைப்பென்றிருக்கின்றது; மனைவி பைத்தியமே என்பதுபோலப் பார்த்து முறைக்கின்றாள்; வளர்ந்த பிள்ளைகள் கண்டனக்குரலெழுப்புகிறன; சிறியவை வீரிட்டுக்கத்துகிறன; பசுக்கள் எதிர்க்குரலெடுத்துக் கத்துகிறன; இரவு கோமயம், கோசலம்,கோமணமாக வீடு நிறைகிறது; உள்ள தூக்கமும் கெட்டுப் போகிறது; குழந்தைகளுக்கு நோய்; மனைவிக்கும் கணவனுக்குமிடையே சண்டை; பெரிசுகளிலே ஒன்றின் காலிலே பசு உழக்கி முறிவு. என்றாலும், ஊருக்கு நல்லது சொல்லும் துறவி எனக்கும் நல்லதுதான் சொல்லியிருப்பாரென்ற பிடிவாதத்திலே நான்கு நாட்களைக் கடத்திவிடுகிறவன், ஐந்தாம் நாள் அரற்றிக்கொண்டோடிப்போய், இன்னோரடுக்குத் துயரையும் சேர்த்துத் துறவிக்குச் சொல்கிறான்; ஆண்டை கொண்டு வந்த பழத்தை உரித்துக் கொடுக்கத் தின்று கொண்டிருப்பவர், மகிழ்ச்சிகொள்முகம் மாறாது, "காளைகளையும் கொண்டு வந்து உள்ளே கட்டு; நல்ல வலிதான தாம்புக்கயிறு வேண்டுமானால், ஆச்சிரமத்திலேயிருந்து தந்துதவுகிறேன்" என்கிறார்; குழம்பினாலும் சங்குசக்கரக்கைத்துறவிதான் எல்லோருக்கும் நல்லவராச்சே; "நன்றி" என்று கயிற்றை வாங்கிக்கொள்கிறான்; "ஊருக்கும் உபத்திரவப்பட்டாருக்கும் உதவத்தானே நானிருக்கிறேன்" என்று அடுத்த பழத்துக்குச் சாமி நழுவுகிறார். வீட்டுக்குள்ளே துயரமும் காளையேறிய சட்டிமுட்டிகளின் உடைபாடும் இன்னும் பெருகுகின்றன; திருப்பித் துறவியிடம் போவது கோழிக்குடும்பம் குடிசைக்குள்ளே வந்து முடிகிறது; வண்டில் ஈறாக வீட்டுக்குள்ளே வந்து சேர்ந்த பின்னாலே, துயரம் கேட்கிற துறவி சொல்கிறார், "வளர்ந்த பிள்ளைகளைத் தொழுவத்திலே விடு." திகைத்துப்போனாலும், துறவி ஊருக்கு நல்லவர்; விவசாயி எவ்வளவு அடித்தாலும் தாங்கும் நல்லவன். இருவர் வெளியே போவதொன்றும் இடப்பிரச்சனையைத் தீர்க்கவில்லை; ஆனால், குடும்பத்துள்ளே பெரும்பிரச்சனையைக் கொண்டு வந்துவிடுகின்றது; ஒரு சிறுகுழந்தை அம்மை கண்டு மாண்டு போகிறது; தொழுவத்திலே மூத்த மகனுக்குக் கால் முறிந்து போகிறது. இத்தோடு ஆண்டை நினைத்துக் கூப்பிடும் நேரமெல்லாம் தோட்டவேலை வேறு. காளைகள் போக்கிடப் புல்லின்றி நோஞ்சானாகின்றன. பசுமடி வற்றிப் போகிறது; மிதியுண்டு செத்த கோழிக்குஞ்சுகள் எண்ணிக்கை தெரியவில்லை.

கடைசியிலே ஆறுமாதங்களின் பின்னாலே துறவியை நம்பின ஏரணம் பிழைத்ததென்று போய் குரலெழுப்பி முறையிடுகிற விவசாயிக்கும் கூடப்போன மனைவிக்கும் ஆண்டை சகிதமாகத் தரிசனம் கொடுத்துக்கொண்டிருக்கும் சாமி சொல்கிறார், "இனிமேல் கோழிகள் தவிர்ந்த இரண்டு கால்ஜீவிகள்மட்டும் குடிசைக்குள்ளே வாழுங்கள்." "உங்களிடம் வழிகேட்டு வரமுன்னாலே அப்படித்தானே இருந்தோம் - ஒரு குழந்தை அதிகமாக உயிரோடிருந்தாலுங்கூட" எனுமாபோல ஏமாற்றத்திலும் இயலாமையிலும் குரல் கேவுகிறது; "ஸ்வாமி அனுக்கிரஹத்திலே வித்தியாசத்தை உணர்வாய்" என்கிறார் மந்தஹாஸஞானி. தலையைத் தொங்கப்போட்டுக் குழப்பத்தோடு திரும்புகின்ற தம்பதிகளிடம் ஆண்டை, 'இன்னமும் பெரியமனதுடன் குடிசையை இன்னமும் உனக்குத் தந்திருக்கின்றேன்; இதற்காகவே இனி எனக்கு வாடகை தரவேண்டும்' என்பது போலச் சொல்கிறார். இச்சந்தர்ப்ப இடுக்குள்ளே இத்தனைநாள் இலவச ஆலோசனை சொன்னதற்கு ஆச்சிரமத்துக்குத் தட்சணை வைத்துப் போகத் தர்மச்சக்கரம் சுழற்றிக்காட்டிச் சொல்கிறார் துறவி. பசுக்களையும் காளைகளையும் விற்று ஆச்சிரமத்தட்சணையும் தன்னிலத்தொழுவத்தை ஆண்டைக்கும் கொடுத்துவிடுகிறான்; குடிசையின் பௌதீகநிலை முன்னைவிட மோசம்; ஆண்டை துறவிக்கு ஒரு சின்னத்துளசிமாடம் தொழுவத்தை இடித்துக்கட்டித்தருவதாகச் சொல்கிறார். வீட்டுக்குள்ளே போய்ச் சரிகின்றவனுக்கு உள்வீடு இடம் திறந்து வெளியிலும் வழிவதாகத் தோன்றுகின்றது. சாமியார் பழம் தின்று கொண்டு முண்டிலே சாய்ந்திருந்தபடி ஆண்டை சகிதம் சொன்னது சரிதான். இனிமேலே சாமியாரிடம் வழி கேட்டுத் தூரம் அதிகம் போகவே தேவையில்லை; அவர்தான் ஓட்டைக்குடிசைவாசலிலேயே பூசைமாடம் கட்டி அருள் தர நாளுக்கு நான்குதடவை வந்து போகிறாரே!

இக்கதை கேட்டுப்புளித்துப் பழையதானதென்பதாலே இனிமேல், பிரபாகரனின் தாயார் கடிதம் எழுதிக்கேட்டால், மத்திய அரசிடம் கேட்டு வைத்தியத்துக்காகத் தமிழ்நாட்டுக்குவர அனுமதி பெற்றுத்தரப் பெரியமனதுவைத்து முயற்சித்த பெருங்காதையையும் பயங்கரவாதச்சட்டத்தின்பின்னாலே நெடுங்காலச்சிறைவாசம் வழங்கப்பட்ட பத்திரிகையாளர் திஸநாயகத்தை உலகப்பத்திரிகைச்சுதந்திரநாளன்று விடுதலைவழங்கி மன்னித்த காப்பியத்தையும் நாம் இடம்பெயர்த்து வருங்காலச்சந்ததிக்கு நீதி சொல்லிப் பழக்கலாமெனப்படுகின்றது.

இதைப்போன்ற இன்னொரு கதையுமிருக்கின்றது; வேறொரு சந்தர்ப்பத்துக்குச் சேமித்துக்கொள்ளலாம்.

புலம்பெயர்தமிழர்களின்மீதான கல்

Monday, May 17, 2010

கடந்த ஓராண்டாக வாசித்த ஈழம் தொடர்பான கட்டுரைகளும் எதிர்வினைகளும் விடுதலைப்புலிகளின் இராணுவத்தோல்விக்குப் பின்னாலான, ஈழத்தமிழர் & புலம்பெயர்தமிழர்களின் இருப்பினையும் எதிர்காலத்தினையும் மையப்படுத்திப் பல விவாதப்புள்ளிகளைத் தொடுகின்றன. கட்டுரைகளை வாசிக்கும்போது எழும் எண்ணங்களைத் தெளிவாகச் சொல்லமுடியாத உணர்வும், இதுவரை நாள் சொல்லி எதனைச் சாதித்தோமென்ற ஆயாசமுமே முடிவிலே எஞ்சும். இன்றும் இவ்விவாதப்புள்ளிகளிலே பலவற்றினைப் பேசுவதற்கான பொருத்தமான களமும் கணமும், மேலாக, எஞ்சியிருக்கும் குற்றம் களைந்த தெளிவும் தகுதியும் எனதாகி வரவில்லையென்றே சொல்வேன். ஆனால், புலம்பெயர்ந்த ஈழம் சார்பான தமிழர்கள் என்ன செய்யவேண்டுமென்பதிலே ஓரளவு தெளிவு புலம்பெயர்ந்தவனாக உண்டு.

இக்காலகட்டத்திலே புலம்பெயர்-ஈழத்தமிழர்களாலே எதையுமே பெரிதாகச் சாதிக்கமுடியாதென்ற தொனியிலே அகில நெருக்கடி (ஆய்)குழு (International Crisis Group) மாசி மாதத்திலே அறிக்கை வெளியிட்டிருந்தது. இதற்கான ஆய்வுகளைக் களத்திலும் புலத்திலும் எவ்விதமான அரசியற்பின்புலமுள்ளவர்கள் செய்தார்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனால், இஃது ஓரளவுக்குச் சோர்வினை ஏற்படுத்தும்விதத்திலே ஒரு பக்கச்சார்பாகத் தொகுக்கப்பட்ட அறிக்கையாகத் தோன்றியது. இவ்வாரம் வெளியாகும் இக்குழுவின் "வன்னியிலே கடந்த ஆண்டு நடந்ததவை" மீதான அறிக்கை புலம்பெயர்-ஈழச்சார்பான தமிழர்கள் சோர்வின்றிப் புலம்பெயர் அரசியலிலே உழைக்கவேண்டியதற்கான காரணக்கூறுகளைக் காட்டுகிறது.

புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களுக்கு வரைவிலக்கணம் கொடுப்பதென்பது தண்ணீருக்கு வரைவிலக்கணம் தருவதுபோல - எடுக்கிறவர் குடுவைக்கும் வெப்பத்துக்குமேற்ப வடிவமும் பண்புகளும் வரையறுக்கப்படுகின்றன. ஆளாளுக்கான அரசியலின் தேவைக்கேற்ப வசதிப்படும் இந்த வரையறுப்பு (அல்லது அப்படியொன்று அற்ற தன்மை) அண்மையிலே ஸ்ரீலங்கா அரசினாலே இரண்டு அதீதங்களிலே பயன்படுத்தப்படுவதைக் காணலாம். ஓர் அதீதப்புள்ளியிலே, விடுதலைப்புலிகளின் எச்சமாக, நாடுகடந்த அரசாங்கத்தை அமைக்க புலம்பெயர் ஈழத்தமிழர்கள் முயல்வதாகவும் அவர்கள் 'ஸ்ரீலங்கா'விலே வாழும் தமிழர்களை பிரதிநிதித்துவம் செய்யவில்லையென்றும் அவர்களைப் பயங்கரவாதிகளென்று தடைசெய்யவேண்டுமென்றும் மேற்கின் அரசுகளிடம் ஸ்ரீலங்கா அரசு கேட்கிறது; மறு அதீதப்புள்ளியிலே கொழும்பிலிருந்து கொண்டு தனக்குச் சார்பான, தன் செய்கைகளை ஆதரிக்கும் srilankan tamil diaspora என்று (தான் திட்டமிட்டு அடையாளப்படுத்தும்) புலம்பெயர்தமிழர்களுடன் நாட்டைக் கட்டியெழுப்பப் பேசிவருகின்றோமென்று அறிக்கையை விடச் செய்கின்றது. இப்படியான பாயத்தன்மை கொண்ட வரைவிலக்கணத்தினை எப்படியாக ஈழத்திலே வாழ்கின்றவர்களுக்கு, கடந்தகால இழப்புகளை ஈடு செய்யவும் நிகழ்காலத்தினைக் கட்டியெழுப்பவும் எதிர்காலத்தினை உறுதிசெய்யவும் பயன்படுத்தப்போகின்றோம் என்பதே புலம்பெயர்தமிழர்களுக்கு முன்னாலே நிற்கும் கேள்வி.

எதிர்பாராத விதத்திலே தாக்கும் இயற்கையின் பேரழிவுகளின் பின்னே எங்கிருந்து ஆரம்பிப்பதென்று குழப்பமும் கலக்கமும் கொண்டிருக்கும் ஹெயிட்டி போன்ற சிறுநாடொன்றினதினையும்விட மோசமான சிந்தை+உள+கையறுநிலைகள், புலம் பெயர்ந்தவர்கள், பெயராதவர்கள், அவர்களின் நலன்விரும்பிகள் ஆகியோரைச் சுற்றிக்கிடக்கின்றன. இயற்கையான பேரழிவின் பின்னேயாவது, புறத்திலிருந்து உதவிகளின், ஆலோசனைகளின் அடிப்படைகளிலே எதிர்காலத்தினைக் கட்டியெழுப்பமுடியலாம். ஆனால், எவர் நண்பர், எவர் எதிரிகள் என்று அறியாத நிலையிலேயும் உயிர்பிழைத்திருப்பதாலே ஏற்படும் குற்றவுணர்வோடும் கடந்த ஓராண்டாக இருக்கும் சமூகம் கொள்ளவேண்டிய தன்னம்பிக்கையும் தெரிவும் தெளிவும் போராட்டகுணமும் அதிகம். அரசியலளவிலான போராட்டமுன்னெடுப்போடு உளவியல்ரீதியிலான ஈழத்தமிழர்நலன்களுக்கு எதிரானவர்களின் தொடர்தாக்குதல்களையும், சமயங்களிலே புரிந்துகொள்ளாதவளவுக்குக் குழம்பிப் போயிருக்கும் நட்புச்சக்திகள் தரும் அழுத்தங்களையும் எதிர்கொள்ளவேண்டியிருக்கும். நடைமுறைக்குச் சாத்தியமான, இருக்கும் பலத்தின் எல்லைக்கப்பாற்பட்டு உடனடியே அகலக்கால் விரிக்காது இயங்கவேண்டிய சூழ்நிலையிலே வகுத்துக்கொண்ட நெறிகளிலும் நோக்குகளிலும் சமரசம் செய்து கொள்ளமுடியாத நிர்ப்பந்தமும் எமக்கிருக்கின்றது.

ஈழத்திலே போரினாலே பாதிக்கப்பட்டிருப்பவர்களின் இன்றைய நிலைக்கு ஏதோ புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களிலே கணிசமானவர்களும் அவர்களின் ஆதரவாளர்களுமே காரணம்போலவும், இத்தனை நடந்துமுடிந்துபின்னும் அப்புலம்பெயரிகளின் தொடர் நடவடிக்கைகளினாலேயே ஈழத்திலே தமிழர்கள் மேலும் பாதிக்கப்படுவதுபோலவும் வாதங்கள் மீண்டும் மீண்டும் சில தரப்புகளாலே எழுதப்படுகின்றது. இத்தரப்புகளிலே

1. ஸ்ரீலங்கா அரசு பின்னாலிருக்க, முன்னாலே பேசும் 'புலம்பெயர் தமிழ்ப்பேச்சாளர்கள்' உண்டு;

2. தம்மோடு ஒத்தியங்காக் கருத்துவெளிப்படும்போதெல்லாம் பின்னாலே விடுதலைப்புலிகளிருப்பதான காலாகாலத்துப்பேரச்சத்திலே எதிர்க்கும் புலம்பெயர் இடதுசாரி உதிரிகள் அடக்கம்;

3. விடுதலைப்புலிகளின் மக்களுக்கு எதிரானதெனச் சொல்லப்படும் இறுதிக்காலகட்டச்செயற்பாடுகளினாலே அதுவரைநாள் அவர்களுடனேயே இருந்து இடம்மாற்றிக்கொண்டவர்களின் புலம்பெயர்நண்பர்கள் அடக்கம்;

4. தம் இருப்பினைப் பிரதிபலிக்கும் தமிழ் இலக்கியவாதிகளும் புரட்சிவாடிகளும் இந்திய ஊடகங்களும் "ஸ்ரீலங்காவுக்குப் போய்ப் போராடுங்கள்" என்று சொல்லும் இந்தியத்தேசியத்தோடு புலம்பெயர்ந்தவர்களும் அடக்கம்;

5. மேலாக, 'வன்னிநிலத்தில் இறந்தவர்களின் பிணத்திலே பதாகை கட்டிப் பிழைக்கின்றார்கள்' என்ற வகையிலே புலம்பெயர்ந்த தமிழர்களின் போராட்டங்களைக் கொழும்பிலிருந்து விமர்சிப்பவர்களும் அடக்கம்.

இவர்களையெல்லாம் எதிர்கொண்டு முன்னே செல்லவேண்டிய கட்டாயமும் கடப்பாடும் காலத்தினாலே புலம்பெயர்-ஈழத்தமிழர்களுக்கிருக்கின்றது.

ஈழத்திலே இருப்பவர்களின் துயர் ஏதோவொரு வகையிலே -இரத்த உறவுகள், நட்புகள் முதலாகி, குறைந்தளவு சுரண்டிக்கொண்டிருக்கும் குற்றவுளப்பாங்கென்றளவிலேனுங்கூட- புலத்திலேயிருக்கும் அவர்களைச் சேர்ந்தாரை, அவர்கள் நலன்களோடு தம்மைச் சேர்த்திருப்பாரை, மற்ற எந்த அந்நியரையும்விடப் பாதித்துக்கொண்டிருக்கின்றது. அம்மக்களுக்கான துயரினைத் துடைப்பதிலும் எதிர்காலத்திலே அவர்களின் உரிமை நிச்சயப்படுத்தப்படுவதற்கும் குரலை எழுப்பவேண்டிய சுதந்திரத்தினை ஓரளவுக்கேனும் கொண்டிருப்பவர்கள் புலம்பெயர்ந்தவர்களே. அவர்களை ஈழமக்களுக்கு எதிரானவர்களென்பதாக எதிர்ச்சக்திகள் தூக்கிநிறுத்தி நிறுவமுயல்வது அத்தகு குரல் எழுப்பக்கூடிய சுதந்திரத்தோடு அவர்கள் இருப்பதாலேயே. அதனாலே, ஈழத்திலிருக்கும் மக்களின் இன்றைக்கான உடனடித்தேவைகளோடு எதிர்காலத்திலே அவர்கள் தமது சுயநிர்ணய உரிமை கொண்டிருக்கச் செயற்படவேண்டியதும் புலம்பெயர்ந்தவர்களின் கடனாகின்றது. நாடுகடந்த அரசென்று குரலெழுப்புவது எவ்வகையிலே ஈழத்திலேயிருப்பவர்களுக்கு எதிரான செயற்பாடாகின்றது? ஸ்ரீலங்காவும் இந்தியாவும் பலஸ்தீனியத்தின் நாடுகடந்த அரசினை ஆதரித்திருக்கின்றன; புலம்பெயர்ந்த இந்தியமேட்டுக்குடி போன நூற்றாண்டின் ஆரம்பத்திலே இலண்டனிலே இருந்து இந்திய சுதந்திரத்துக்கான கருத்துகளை முன்வைத்து எழுப்பியிருக்கின்றது. அப்படியான நிலையிலே எதற்காக, புலம்பெயர்ந்த தமிழர்களின் குரல்கள் அப்படியாக எழக்கூடாதென இவர்கள் எதிர்பார்க்கின்றார்கள்? அக்குரலினை எழுப்புவதொன்றும் இன்றைக்குச் சிறை அகதிகளாகவோ தமிழர்பூமியிலே தொடர்ந்தெழும்பும் சிங்களக்குடியேற்றங்களுக்குள்ளும் இருக்கின்றவர்களுக்கோ சமகால உதவியினை மறுத்துக்கொண்டு நிகழ்வதாக எதற்காக (& எவராலே) ஒரு தோற்றம் எழுப்பப்படுகின்றது? ஈழத்தமிழர்கள் பாதிக்கப்பட்டிருக்கும் இன்றைய சூழலிலே அவர்களுக்கான சமகால வசதிகள், எதிர்கால சுயநிர்ணய உரிமைகள் இருக்கப்படவேண்டுமென்று சொல்லும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் எதற்காக வலுக்கட்டாயமாகப் புலிகளின் பினாமிகள், எச்சசொச்சங்கள் என்ற வகையிலே முற்றிலும் ஆதாரமற்றும் முறையற்றும் குற்றஞ் சாட்டப்படுகின்றனர்? விடுதலைப்புலிகள் சென்ற பாதை தவறென்று கொண்டாலும், அதற்காகவும் அதன் விளைவாக இன்று மட்டப்பட்டிருக்கும் தமிழர்வாழ்க்கைக்காகவும் எதிர்காலத்திலே ஈழத்திலே தமிழர் தொடர்ந்தும் இப்படியேனும் இரண்டாம்நிலைமக்களாகவே வாழ்வது நியாயப்படுத்தப்படவேண்டுமா?

ஸ்ரீலங்கா அரசும், இந்திய அரசும் மேற்கரசுகளின் அறிக்கைகளும் "கடந்தவை கடந்தவையாகவே இருக்கட்டும்" என்றளவிலே நடந்ததையெல்லாம் குழியிட்டு மூடிப்புதைத்துவிட்டு, ஈழத்தமிழர்களின் பிரச்சனைகளெல்லாம் விடுதலைப்புலிகளிலிருந்தே எழுந்தன என்பதுபோல, -விழுதுகளைத் தறித்துவிட்டு, வேர்களைக் கெல்லியதாகச் காட்டிக்- கடந்துபோகமுயல்கின்றன; தென்னாபிரிக்காவிலே அமைந்ததுபோல ஒரு மெய்யறிந்து மீளிணையும் விசாரணைக்குழுவினைக்கூட அமைப்பதற்கு இவர்கள் குரலெழும்பவில்லை. ஈழத்திலே தமிழர்கள் வடக்கிலும் கிழக்கிலும் இன்னமும் அடைபட்டுப் பாதி, அவலமான நிலையிலே இராணுவநிலையமைப்புகளிடையேயும் புதிதான சிங்களக்குடியேற்றங்களிடையேயும் மீதி இருக்கும்நிலையிலே தமக்கான குரல்களை அவர்களே எழுப்பமுடியுமென்றா அகிலம் எதிர்பார்க்கின்றது? கடந்த புலத்திலுஞ் சரி, முளைத்த நிலத்திலுஞ் சரி, கடந்த ஆண்டின் சடுதியான பேரிழப்பினைச் செரித்துக்கொள்ளமுடியாத நிலையிலே எம்மிடையே ஒரு பரந்த குற்றவுணர்வு ஆழவோடிக்கிடக்கிறது. ஒரு விபத்திலே கூடப் பயணித்தவர் இறந்துபோக நாம் மட்டும் தப்பிப்பிழைத்ததினாலே நடந்தவை எல்லாவற்றுக்கும் நாமே காரணமென்பதாக எம்மை நாமே மேலும் தண்டித்துக்கொண்டு திருப்திப்படும்வகையிலே ஏற்படும் குற்றவுணர்வு இது; சென்ற ஆண்டிலே எழுதப்பட்ட கதைகளிலும் கட்டுரைகளிலும் கவிதைகளிலும் இதனை மிகவும் வெளிப்படையாகவே காணமுடியும். ஆனால், இதுவே ஈழமக்களின் சுயநிர்ணயவுரிமைகளை மறுப்பவர்களுக்கும் ஸ்ரீலங்கா அரசின் பெருங்குற்றங்களையும் மீறல்களையும் நியாயப்படுத்தியோ குழிதோண்டிப் புதைக்கவோ முயல்கின்ற அரசுகளுக்கும் எம்மை ஆடவைக்கும் கோலாகின்றது.

"மறப்போம்; மன்னிப்போம்" முதல் "இலங்கை வாழ் சகல மக்களையும் ஆரத்தழுவி உழைக்கும்மக்கள்சார்ந்த போராட்டத்தினை அதிகாரவர்க்கத்துக்கெதிராக முன்னெடுத்தல்" ஊடாக, "இந்தியாவினையும் அதன் அரசியல்வாதிகள் & அரசதிகாரிகளையும் எம் அலுவல்களைக் கவனிக்கவிடுதல்" என்பதுவரையிலான மழுங்கடிக்கும் அனைத்துக்கோஷங்களின் பின்னான அரசியலினையும் நடைமுறைச்சாத்தியமின்மைகளையும் அடுத்தவர்கள் நலன்களையும் தெரிந்து தெளிந்திருக்கவேண்fடும். இவ்விடத்திலே ஈழத்தமிழர்நலனுக்கான எதிர்ப்புச்சக்திகள் இத்தனையையும் ஒதுக்கிவைத்துவிட்டு, விடுதலைப்புலிகளைமட்டும் மீளப்பரிசீலனை செய்வதனையே மீளமீளப் பேசுவதும், ஸ்ரீலங்கா அரசூடான நாட்டைப் பலப்படுத்துதலே நொந்திருக்கும் நிலத்தமிழர்களை உடனடியாகக் காக்குமென்றும் நோக்குகளை மழுங்கடிக்க முழுநேரமாக முயற்சிக்கும். சுயமான தம் நோவினையும் வாழ்வினையும் பேச வாய்ப்போ உளநிலையோ கொண்டிராத நிலையிலிருக்கும் நிலத்தமிழர்களுக்காக, அவர்களின் கூறுகளான புலம்பெயர் தமிழர்கள் பேசமுடியாதென்று கூறும் ஸ்ரீலங்கா & இந்திய அரசுகளுக்கு, அவ்வாறு அவ்வீழத்தமிழர்களுக்காகப் பேசுமுரிமையைத் தந்தது எது? கொன்று வென்று சிதைத்திருக்கும் அதிகாரமென்றே பதில் கிடைக்கமுடியும். ஈழத்தமிழர்களின் தேவைகளையும் எதிர்பார்ப்புகளையும் ஈழத்திலிருக்கும் அவர்களே நிர்ணயிக்கவேண்டுமென்பதிலே எதுவிதமான மாற்றுக்கருத்துமில்லை. ஆனால், இப்படியாக வென்றவர்கள் தாமே நலன்காக்கும் இடைத்தரகர்களாகக் காட்டிக்கொள்ளும்வேளையிலே, அப்படியான அதிகாரசக்திகளைத் தொடர்ந்தும் கதிரையின் விளிம்பிலே வைத்துக்கொள்ளவும் நிலத்தமிழர்களின் நோவினைத் தாங்கிக்கொள்ளவும் புலம்பெயர்தமிழர்கள் நாளாந்தம் ஏதோ விதத்திலே பேசவும் செயற்பட்டுமே ஆகவேண்டும். வருங்காலச்சந்ததிகளும் இச்சுமையினை, தாங்கள் வெறும் தற்காலிகக்காப்பாளர்களும் பேச்சாளர்களுமே என்ற அளவிலே தாங்கிச் செல்லவேவேண்டும். இதனைச் சொல்லவும் செய்யவும் எவரும் விடுதலைப்புலிகளை இயக்கரீதியாக ஆதரித்தவர்களாகவோ, நாடுகடந்த அரசு/வட்டுக்கோட்டைத்தீர்மானம் இவற்றோடு சம்பந்தப்பட்டவர்களாகவோ இருக்கத்தேவையில்லை. வெறுமனே தாயோ தம்பியோ அக்காவோ கூடப்படித்த நண்பனோ இன்னமும் அந்நிலத்திலே மிச்சமாக விடப்பட்டும் விடுமுறைக்கும் நாட்டுக்குப் போகமுடியாதிருக்கும் சாதாரண புலம்பெயர்தமிழனாகவிருத்தலே போதுமானது; இவர்களின் துயரை உணர்ந்து கொண்ட மற்றைய புலம்பெயர்தமிழராக இருத்தல் போதுமானது. சென்ற ஆண்டும் இவ்வாண்டும் மேற்கிலே நிகழும் ஊர்வலங்களிலே கலந்துகொள்கின்றவர்களிலே பலர் இவ்வாறுதான் இருக்கின்றார்கள். இத்தகு அக்கறையை வெறுமனே புலிகளின் பினாமித்தனமென்றும் பாசிசஓநாய்களின் பின்னே நடக்கும் மந்தைக்கூட்டமென்றும் புலம்பெயர்நாடுகளிலே குளிர்பதன அறைகளிலேயிருந்து தட்டச்சுகின்றதாகவும் சுருக்கியோ திரித்தோ சொல்கின்றவர்கள், இதுவரை ஈழநிலத்திலே வாழும் மக்களுக்காகச் சாதித்தவற்றின் எல்லைகள் நான்கு பதிவுகளின் எச்சமாகவும் பேஸ்புக்கின் குறிப்பேடுகளாகவும் உருவிற்றர் கீச்சுக்களின் முடக்கவிதைகளாகவுமே அடங்கிமடிந்துபோகின்றன. களத்திலே இறந்தவர்களின் பிணத்திலே பதாகை புலத்திலே கட்டிப் பிழைக்கின்றார்கள் என்ற கவிதையை எழுதிக்கொண்டிருப்பவர்களுக்கு, தினக்கூலியை விட்டுவிட்டுத்தான் வீதிகளிலே பனியிலும் வெயிலிலும் புலம்பெயர்ந்தமக்கள் பலர் விரைவீதிகளிலே கையைக் கோர்த்துக்கொண்டு இறங்கினார்களேயொழிய, "சுறா" படத்துக்குச் சூடம் ஏற்றுவதையும் விஜய் படத்துக்குப் பால்வார்க்கும் கணத்தினையும் ஐபில் கிரிக்கெட் பந்துக்குப் பந்து விவரணை இணையத்திலே செய்யும் களியாட்டத்தினையும் தவிர்த்துவிட்ட நேரத்திலல்ல என்பது புரியாமலிருக்கமுடியாது.

இந்நிலையிலே எக்காரணம் கொண்டும் புலம்பெயர்ந்த தமிழர்கள், சொந்தநிலத்திலே அகதிகளாக வாழும் தமிழர்களின் இன்றைய நிலையை மேம்படுத்த (ஸ்ரீலங்கா அரசுசார் அமைப்புகள், குழுக்கள் இவற்றினூடாக) உதவவேண்டுமென்பதனை மட்டுமே ஒற்றை நோக்காகக் கொண்டு நடக்கமுடியாது; நடக்கவுங்கூடாது. புலம்பெயர் ஈழ ஆதரவுத்தமிழர்களின் அமைப்பார்த்த குழுச்செயற்பாடுகள் அடிப்படையிலே மூன்று நோக்குகளைத் நிறைவேற்றும் திட்டங்களைக் கொண்டிருக்கவேண்டும்:

ஒன்று- கடந்த காலத்தின் ஸ்ரீலங்கா அரசினது மனிதவுரிமைமீறல்களுக்கான செயற்பாடுகளை ஆவணப்படுத்துதலும் அதற்கான நியாயமும் ஈடும் கேட்டு அகிலம்சார் நியாயம்காண்குழுவின் முன்னாலே நிறுத்துதல்;

இரண்டாவது - உடனடித்தேவையாக ஈழநிலத்திலே மக்களின் இருப்பினையும் இருப்பிடங்களையும் -ஸ்ரீலங்கா அரசின் அதிகார & பொருளாதாரக்கைகளைப் பலப்படுத்தாத வகையிலே- அகிலம்சார்ந்த அமைப்புகளோடு தம்மை இணைத்துக்கொண்டு செயற்படுவதன்மூலம் கட்டியெழுப்பலும் தக்கவைத்தலும் மேம்படுத்தலும்;

மூன்றாவது - எதிர்காலத்திலே கடந்த காலம் போல மீண்டும் ஒரு பெருங்கொலைக்களமாக நிலம்மாறாது தடுத்தலும் ஈழத்தமிழர்களின் சுயநிர்ணயவுரிமை உறுதி செய்யப்படும் வகையிலே நிலத்தோடு ஆரோக்கியமான உறவினைப் பேணலும் புலத்திலே இதற்கான அடித்தளமாக வரும் தன் சந்ததியினரை பொருளாதார, அரசியற்பலம் பெருக -தனித்திராது கலந்திருக்க- நிறுத்துதலும்.